மத்தூரை அடுத்த ஜெகதேவி ஊராட்சியில் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அண்மையில், ஜெகதேவி ஊராட்சியில் வீடுவீடாகச் சென்று டெங்கு தடுப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை மேற்கொண்டு வீடுகளில் தேவையற்ற பொருள்களை அகற்றும் பணிகளை ஆட்சியர் பார்வையிட்டார். மேலும், அங்குள்ள அங்கன்வாடி மையங்களிலும். பொதுமக்கள் கூடியிருக்கும் இடங்களிலும் நிலவேம்பு குடிநீர் வழங்கினார். ஆய்வின் போது, மாவட்ட பூச்சியல் வல்லுநர் அனுராதா, மருத்துவர் கணேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவகி, ஹேமலதா, சுகாதார ஆய்வாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.