ஆணவப் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, ஒசூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒசூரில் காதல் திருமணம் செய்த நந்தீஸ், சுவாதி ஜோடி பெண்ணின் உறவினர்களால் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து, இக்கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஒசூரில் வெள்ளிக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒசூரில் பெங்களூரு தேசிய சாலையில் நடைபெற்ற மறியலுக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயலர் கனியமுதன் தலைமை தாங்கினார். மண்டல செயலர் நந்தன் முன்னிலை வகித்தார். தகவல் அறிந்த ஒசூர் நகரப் போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியலால் ஒசூர்-பெங்களூரு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.