தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்துவிட்டதாக ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலைப்பேட்டை கவுசல்யா தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் இதுவரை 185-க்கும் மேலான ஆணவக் கொலைகள் நிகழ்ந்து விட்டன. ஆனால், இதுவரை தமிழ்நாட்டில் ஆணவப்படுகொலையே நடக்கவில்லை என்று ஆட்சியாளர்கள் கூறி வருகின்றனர். இனியும் அப்படித்தான் சொல்வார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது, நந்தீஷ், சுவாதி ஆணவக் கொலையையும், ஏதோ ஒரு கொலை போன்று கடந்து போய்விடுவார்களோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.
ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கு, உடனடியாக தனி சட்டம் இயற்ற வேண்டும். மேலும் இந்த வழக்கில் வன்கொடுமைச் சட்டம் பதியப்பட வேண்டும். வெறும் கொலைக் குற்றமாக இதை பார்க்க முடியாது என்றார்.