ஒசூரில் அதிமுக பிரமுகர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒசூர் வட்டம், தொரப்பள்ளி அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் முனிராஜ் (33). அதிமுக பிரமுகர். சாலை பணிகளை மேற்கொண்டு வந்த ஒப்பந்தாரர். கடந்த செப். 15 ந் தேதி அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழாவில் பங்கேற்பதற்காக தனது இரு சக்கர வாகனத்தில பாகலூர் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்துக்குச் சென்றார்.
அதன்பிறகு அவரைக் காணவில்லை. அட்கோ போலீஸாரும் வழக்குப்பதிவு செய்து முனிராஜை தேடி வந்த நிலையில், முனிராஜ், ஆனேக்கல் அத்திப்பள்ளி இடையே பிருந்தாவன் கார்டன் என்ற இடத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க ஒசூர் நகர காவல் ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையில் ஒரு தனிப்படையும், அட்கோ காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் மற்றொரு தனிப்படையும் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந் நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய இருவரை போலீஸார் புதன்கிழமை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என போலீஸார் தெரிவித்தனர்.