முயற்சியும், இலக்கையும் கொண்டவர்கள் எதனையும் சாதிக்க இயலும் என மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் கூறினார்.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தொழில் முனைவோர் குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கை தொடக்கிவைத்து மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகர் பேசியது: தொழில் முனைவோர், தொடங்க உள்ள தொழில் குறித்து அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அந்த தொழிலுக்கான பயிற்சியை பெற வேண்டும். தொழில் குறித்த எதிர்கால தொழில் நுணுக்கங்களை அறிந்து கொண்டு கடினமாக உழைக்க வேண்டும்.
தொழில்முனைவோருக்கு மத்திய, மாநில அரசுகள், பல்வேறு வாய்ப்புகளை வழங்குவதோடு, வழிகாட்டியாகவும், கடனுதவிகளையும், நலத் திட்டங்களையம் வழங்கி வருகிறது. மாணவிகள் நம்பிக்கையுடன் திறமைகளை கூடுதலாக வளர்த்துக் கொள்ள வேண்டும். சிந்தனையை தவறவிடக் கூடாது. முயற்சியும், இலக்கையும் கொண்டவர்கள் எதனையும் சாதிக்க இயலும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கீதா, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை சிவகாமி, பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரங்கநாதன், மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.