கிருஷ்ணகிரி மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார், ஆந்திர மாநில எல்லையில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், அரக்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் சர்வேஸ்வர ராவ், முன்னாள் எம்எல்ஏ சிவேரி சோமா ஆகியோரை மாவோயிஸ்ட்டுகள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம், ஆந்திர மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தமிழக முதல்வர் திருப்பதியிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக சேலத்துக்கு சாலை மார்க்கமாக செவ்வாய்க்கிழமை செல்ல உள்ளார்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆந்திர எல்லை வனப் பகுதிகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையிலான போலீஸார், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸார் என தீவிர கண்காணிப்புப் பணியில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்திலிருந்து மாவோயிஸ்ட்டுகள் யாரும் தமிழ்நாட்டுக்குள் நுழையாமல் இருக்கும் வகையில் ஆந்திர மாநில எல்லையில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட வரமலைகுண்டா, ஒப்பதவாடி, மூலக்கொல்ல, காளிக்கோயில், ஏக்கல்நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் இரவு, பகல் பாராமல் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடம் புதிய மனிதர்களின் நடமாட்டம் இருந்தால், அதுகுறித்து உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சோதனைச் சாவடிகளை கடந்து செல்லும் வாகனங்களை போலீஸார் சோதனைக்கு உள்படுத்திவருகின்றனர்.