ஜவளகிரியில் வனப் பகுதியில் 2 சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம் இருப்பதால் ஜாக்கிரதையாக இருக்கும்படி பொதுமக்களுக்கு, வனத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து தப்பிய 2 சிறுத்தைப் புலிகள், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் ஜவளகிரி வனப் பகுதிக்குள் கடந்த இரு நாள்களுக்கு முன்பு வந்துள்ளன.
இந்த சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம், அந்தப் பகுதியில் வனத் துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி உள்ளன. ஜவளகிரி வனப் பகுதிக்குள் சிறுத்தைப்புலிகள் வந்துள்ளதால், வனத் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி உத்தரவின் பேரில், ஜவளகிரி வனச் சரகர் முருகேசன் தலைமையிலான வனக் குழுவினர், சிறுத்தைப் புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
இதுகுறித்து வனத் துறையினர் கூறுகையில், ஜவளகிரி வனப்பகுதியையொட்டி வசிக்கக் கூடிய மக்கள் உஷாராக இருக்க வேண்டும். ஆடு, மாடுகளை வனப்பகுதிக்குள் மேய்க்க வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.