ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் த. மாதப்பன் தலைமை வகித்தார், மத்தூர் கல்வி மாவட்ட அலுவலர் இல. நடராஜன் முன்னிலை வகித்து மாணவர்களைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் ரொக்கத் தொகையை வழங்கினார். பெண் கல்வி, பாலித்தீன் இல்லாத பாரதம் போன்ற தலைப்புகளில் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதலிடம் பெற்ற க. குணசேகர், மூன்றாம் இடம்பெற்ற எம். கவிமணி ஆகியோரை பாராட்டி சான்றிதழ் மற்றும் ரொக்கம் வழங்கப்பட்டன. மாணவர்களுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியர்கள் பசுமைப் படை க. முத்துக்குமார், ஜே.ஆர்.சி. கு. கணேசன் ஆகியோரையும் பாராட்டினர். நிகழ்ச்சியில் பள்ளி துணை ஆய்வாளர் சு. சுதாகர், முதுகலை ஆசிரியர் வெங்கடேசன், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.