கிருஷ்ணகிரியில் பிப். 22-ஆம் தேதி ஊர்காவல் படை வீரர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், வியாழக்கிழமை வெளியான செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட ஊர்காவல் படையில் காலியாக உள்ள 33 ஆண்கள், 18 பெண்கள் என மொத்தம் 51 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான தேர்வு, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பிப். 22-ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறும். இதில், பர்கூர், கிருஷ்ணகிரி ஆகிய காவல் உள்கோட்டத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம். மாவட்டத்தில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாவட்டத்தில் எந்த காவல் உள்கோட்டத்தில் இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்.
இந்தப் பணிக்கு 22 முதல் 45 வயதுக்குள்பட்ட 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பெற விருப்பம் உள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டை, மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றை உடன் கொண்டு வரவேண்டும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பிப். 20-ஆம் தேதி கடைசி நாள் ஆகும். காவல் உதவி ஆய்வாளர், ஊர்காவல் படை அலுவலகம் (கிருஷ்ணகிரி சுங்க வசூல் மையம் அருகே), பெங்களூரு சாலை, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த முகவரியில் விண்ணப்பங்களையும் பெற்றுக் கொள்ளலாம்.