கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த குமரேசன்(30), அய்யர்(35), கோவிந்தராஜ்(45) ஆகிய மூவரும் லாரியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை ஏற்றிக் கொண்டு சென்னையை நோக்கிச் சென்றனர். சனிக்கிழமை நள்ளிரவு கிருஷ்ணகிரியை அடுத்த ஒரப்பம் பகுதியில் சென்று கொண்டிருந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி கவிழ்ந்தது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரப்பத்தைச் சேர்ந்த சத்யராஜ்(27), பழனி(37) மற்றும் குமரேசன், அய்யர், கோவிந்தராஜ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
இவர்களில் சத்யராஜ், பழனி ஆகிய இருவரும் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
மேலும், 15-க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன. இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.