காவேரிப்பட்டணம் அருகே உள்ள பொது கிணற்றை மூட பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேர்ப்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சு.பிரபாகரை சந்தித்து வெள்ளிக்கிழமை அளித்த மனு: தேர்ப்பட்டியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள பொது கிணற்று நீரை 60 ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சிலர் இந்த கிணற்றை ஆக்கிரமித்து, அதை மூடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து, காவல் துறையினரிடமும், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடமும் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது, கோடை காலம் தொடங்கிய நிலையில், தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க, கிணற்றை தூர்வாரி, ஆக்கிரமிப்பாளரிடமிருந்து மீட்டு, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஆக்கிரமிப்பாளரிடமிருந்து கிணற்றை மீட்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்தனர்.