ராயக்கோட்டை அரசு பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினர் அசோக்குமார் வழங்கினார் .
கெலமங்கலம் ஒன்றியம், ராயக்கோட்டை அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவுக்கு பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவர்கள் நஞ்சப்பன்,கோபால் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் நாராயணன் வரவேற்றார்.
ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக எம்பி அசோக்குமார் கலந்து கொண்டு, பள்ளிக் கல்வித் துறையில் தமிழக அரசு செயல்படுத்திவரும் நலத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். பிறகு 415 மாணவர்கள், 512 மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து மக்களவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.8.5 லட்சம் மதிப்பில் தளவாடப் பொருள்களை வழங்கினார். பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமைஆசிரியை உமா நன்றி கூறினார்.