விவசாயத் தொழிலாளர்களுக்கான மத்திய சட்டத்தை உருவாக்கக் கோரி, கிருஷ்ணகிரியில் சிஐடியு சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி புறநகர்ப் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநிலச் செயலாளர் கே.திருச்செல்வன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் எஸ்.பீட்டர், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாள் வி.கோவிந்தசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும். பொது விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கான மத்திய சட்டத்தை உருவாக்க வேண்டும். அனைவருக்கும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்தி, பொதுவிநியோகத் திட்டத்தை பலப்படுத்த வேண்டும். வேளாண் அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையின்படி விலையை தீர்மானிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.