தருமபுரி-ஒகேனக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைக்கப்படும் என பென்னாகரத்தில் கூட்டணி கட்சி வேட்பாளரை ஆதரித்து பேசும் போது, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்குறுதி அளித்தார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
பின்னர் முதல்வர் பேசியது: தருமபுரியில் சிப்காட் அமைக்கப்படும். அதன் மூலம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். தருமபுரியில் இருந்து ஒகேனக்கல்லுக்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்படும். கோதாவரி-காவிரியை இணைப்பதால் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்புவதன் மூலம் விவசாயிகள் பயனடைவர். தாசம்பட்டி, கோடுப்பட்டியிலிருந்து பூதிப்பட்டி வரை உள்ள வனப் பகுதியில் யானைகள் காப்பகம் அமைக்கப்படும். நாகாவதி அணைப் பகுதியில் இருந்து அரகாசனஅள்ளி பகுதியில் புதிய சாலை அமைக்கப்படும் என்றார்.
இதில், கூட்டணி கட்சிகளின் மாவட்ட, ஒன்றிய, நகர உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர்
கலந்துகொண்டனர்.