ஆணவக் கொலை மூலம் திராவிடக் கட்சிகள் சாதிய ஒழிப்பில் தோல்வியடைந்துள்ளன என்று பா.ஜ.க. தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் சேலத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: ஸ்டெர்லைட் ஆலையைப் பொருத்தவரை ஆய்வு நடத்தி பாதிப்பு இல்லை என ஏற்கெனவே பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது. வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டுமென்றால், தொழில் மயமாக்கம் என்பது அவசியமாகும். இந்த ஆலையால் 30 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக சில நகர்ப்புற நக்சல் அமைப்புகள் தேவையற்ற பரப்புரை செய்து வருகின்றனர். ஆனால், உள்ளூர் மக்கள் ஆலையை விரும்புகின்றனர்.
புயல் நிவாரண நிதியாக முன்கூட்டியே ரூ.353 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அரசு அறிக்கை அளித்த பின்னர் மீதித் தொகை தரப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தற்போது பெட்ரோல் விலை 5 பைசா உயர்ந்ததற்கும், 5 மாநில தேர்லுக்கும் தொடர்பு இல்லை. 5 மாநிலத் தேர்தல் குறித்து ரஜினி பேசியிருப்பது அவரது கருத்து. அவர் அரசியல் கட்சி ஆரம்பித்து அவரது கொள்கையும், நிலைப்பாட்டையும் சொல்லும் வரை அதைப் பற்றி விமர்சிக்கப் போவதில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சாதிய ரீதியான பேச்சுக்களால் வன்மத்தைத் தூண்டி வருகிறார். ஆணவக் கொலை என்பதன் மூலம் திராவிடக் கட்சிகள் சாதிய ஒழிப்பில் தோல்வியடைந்துள்ளன என்றார்.