டெங்கு, பன்றிக்காய்ச்சல் சிகிச்சை குறித்த அரசு உத்தரவை மீறும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத்துறை ஆணையரும், முதன்மைச் செயலாளருமான பெ.அமுதா தெரிவித்துள்ளார்.
டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த வகையில்டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து கண்காணிக்க மாவட்டங்கள்தோறும் முதன்மைச் செயலர் தலைமையில் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையரும், அரசு முதன்மைச் செயலாளருமான பெ.அமுதா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
சேலம் அரசு மருத்துவமனையில் பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்களுக்கு காய்ச்சலின் தாக்கம் குறைந்துள்ளது. காய்ச்சல் முழுவதும் குணம் அடைந்த பின்பு அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.
அதே நேரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு டெங்கு, பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் உடனடியாக மாவட்ட சுகாதாரத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
மாறாக, சிகிச்சை அளித்த சில நாள்களுக்கு பிறகு அரசு மருத்துவமனைக்குச் செல்ல பரிந்துரைக்கக்கூடாது என ஏற்கெனவே தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் தனியார் மருத்துவமனைகள் மீது இந்திய மருத்துவச் சங்கத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். காய்ச்சலுக்கு வருவோரைக் காப்பாற்றிட போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.