பெங்களூரில் இருந்து ஆட்டோவில் கடத்தி வந்த தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருள்களை காரில் வந்து பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கோவை, தாமஸ் தெரு, விநாயகர் கோயில் பகுதியைச் சேர்ந்த ஜிகாதஜி மகன் பவர்லால், அதே பகுதியைச் சேர்ந்த ஒட்டுநர் ஜோர்ஜி மகன் மோகன்லால் ஆகியோர் பெங்களூருவில் இருந்து தடைசெய்யப்பட்ட பான்மசாலா பொருள்களை மினி ஆட்டாவில் ஏற்றிக்கொண்டு கோவைக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். அந்த மினிஆட்டோவை பின்தொடர்ந்து கார் ஒன்று வந்துள்ளது. சேலத்திலிருந்து சங்ககிரி நோக்கி வந்த போது, சங்ககிரி வைகுந்தம் சுங்கச்சாவடி அருகே காரில் வந்த நான்கு பேர், ஆட்டோவை நிறுத்தி போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் எனக்கூறி, ஆட்டோ ஒட்டுநரை காரில் ஏற்றிக்கொண்டனர்.பின்னர் ஆட்டோவை காரில் வந்த நபர்களில் ஒருவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
சங்ககிரி அருகே உள்ள பச்சாம்பாளை சென்றபோது, அங்கு மினி ஆட்டோவில் இருந்த பொருள்களை காரில் ஏற்றிக் கொண்டு ஆட்டா ஓட்டுநர் மோகன்லாலை அப்பகுதியில் இறக்கிவிட்டு கார் கோவையை நோக்கிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அப்பகுதியில் நெடுஞ்சாலை ரோந்துப் பணியில் இருந்த போலீஸார் சந்தேகம் அடைந்து மினி ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்த மோகன்லாலிடம் விசாரித்துள்ளனர். பின்னர் இதுகுறித்து சங்ககிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளர் அசோக்குமார், சங்ககிரி காவல் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்ட போலீஸார் விசாரித்தனர். போதை பொருள் தடுப்புப் பிரிவு தனிப்படை போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விசாரணை நடத்துவததற்காக தனிப்படை போலீஸார் கோவை, பெங்களூரு பகுதிகளுக்கு சென்றுள்ளனர்.