வாழப்பாடியை அடுத்த சின்னகிருஷ்ணாபுரம் பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில், 15-ஆம் ஆண்டு கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு விழா, கடந்த 9-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்களுக்கு காப்புக் கட்டுதல், சஷ்டிபாராயணம் மற்றும் தீபாராதனை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அன்னதானம் நடைபெற்றது. அன்றிரவு வாழப்பாடி இலக்கியப் பேரவையின் நகைச்சுவை பாட்டிசைப் பட்டிமன்றம் நடைபெற்றது.
10-ஆம் தேதி மகாதீபாராதனை, அபிஷேக ஆராதனைகள், பள்ளிக் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 11 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை சிறப்பு பூஜை, இரவு உதயமாம்பட்டு பாரதபிரசங்கர் கொளஞ்சி குழுவினரின் கந்தபுராண பிரசங்கம் நடைபெற்றது. 12-ஆம் தேதி (திங்கள்கிழமை) கோயில் வளாகத்தில் கந்தபுராண பிரசங்கம் நடைபெறுகிறது.
நாளை செவ்வாய்க்கிழமை காலை, திருநங்கைகள் நடத்தும் சூரசம்கார நிகழ்ச்சியும், விநாயகர் ஆலயத்தில் இருந்து பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு பால்குட ஊர்வலமும் நடைபெறுகிறது. பகல் 12 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாண வைபோவம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு புஷ்ப அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா உற்சவம், இரவு 7 மணிக்கு, ஆதிகேசவன் குழுவினரின் திருநங்கைகள் தெய்வீக நடன நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பெரியதனக்காரர்கள், இறைவழிபாட்டு மன்றத்தினர் மற்றும் விழாக்குழுவினர், கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.