கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்றக் கோரி, கூலித் தொழிலாளி தனது மனைவி, மகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
சேலம் மாவட்டம், சங்ககிரி இடங்கணசாலை பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி கவிதா, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.1 லட்சம் கடன் வாங்கியுளார். இதில் 4 ஆண்டுகள் மாதாமாதம் வட்டி செலுத்தி வந்துள்ள நிலையில், கடந்த ஆண்டு தர்மலிங்கம் உடல்நலம் பாதிக்கப்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் ஓர் ஆண்டு வட்டி செலுத்த முடியாமல் போனதாம்.
இதையடுத்து, 5-ஆம் ஆண்டு செலுத்த வேண்டிய வட்டித் தொகைக்கு வட்டி மேல் வட்டி கணக்கிட்டு ரூ.1.20 லட்சம் தருமாறு அந்த நபர் மிரட்டி வந்தாராம்.
இந்த நிலையில், பணம் கேட்டு அந்த நபர் தொடர்ந்து மிரட்டல் விடுப்பதால் தர்மலிங்கம் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்து, கந்து வட்டிக்காரர் தங்களை அடித்து துன்புறுத்துவதாகவும், அவர்களிடம் இருந்து தங்களை காப்பாற்றுமாறும் கோரிக்கை மனு அளித்தார்.