சேலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ரௌடி உள்பட 2 பேர் பலியாயினர்.
சேலம் அஸ்தம்பட்டி அருகே மணக்காடு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் வசித்து வருபவர் சத்யா. இவர் மீது திமுக பிரமுகர் சோலைராஜ் கொலை வழக்கு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், திங்கள்கிழமை காலை சத்யா தனது நண்பர் சதீஷ்குமாருடன் இருசக்கர வாகனத்தில் மணக்காடு பகுதியில் இருந்து அஸ்தம்பட்டி நோக்கி வேகமாகச் சென்றார். இருசக்கர வாகனத்தை சதீஷ்குமார் ஓட்டிச் சென்றார்.
உழவர் சந்தை அருகே சென்ற போது, முன்னால் சென்ற சேலம் மாநகராட்சி குப்பை லாரியை முந்த முயன்றார். அப்போது, எதிரே ஆட்டோ வந்ததால் நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் லாரி மீது மோதியது. இதில் சத்யா மற்றும் அவரது நண்பர் சதீஷ்குமார் ஆகியோர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
பின்னர் இருவரும் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், செல்லும் வழியில் சத்யா உயிரிழந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சதீஷ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிறிது நேரத்தில் சதீஷ்குமாரும் உயிரிழந்தார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.