வாழப்பாடி அருகே தனியார் பள்ளியில் மாணவரைத் தாக்கிய ஆசிரியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
வாழப்பாடி பேரூராட்சி, ஏழாவது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் ஜவுளி வியாபாரி பிரபாகரன். இவரது மகன் ராகவராஜ் (15). இவர் அங்குள்ள முத்தம்பட்டி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவரின் தாயாரும் அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார்.
குழந்தைகள் தினமான கடந்த 14-ஆம் தேதி ராகவராஜ் வகுப்பில் மற்றொரு மாணவரின் கைக்கடிகாரம் காணாமல் போனதால், விசாரிப்பதற்காக மாணவர் ராகவராஜை தனி அறைக்கு அழைத்துச் சென்ற அப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் வெங்கடேஷ் கடுமையா தாக்கியுள்ளார். இதில் மாணவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரது பெற்றோர், மாணவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மாணவரின் தந்தை பிரபாகரன் சமூக ஊடகங்களில் தகவல் பரப்பினார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோரை அழைத்துப் பேசிய பள்ளி நிர்வாகம், மாணவரைத் தாக்கிய உடற்கல்வி ஆசிரியரை பணி நீக்கம் செய்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தனியார் பள்ளி நிர்வாகி சின்னு என்கிற முத்துசாமி கூறியதாவது:
உடற்கல்வி ஆசிரியர் ஆசிரியர் தாக்கியதில் மாணவர் காயமடைந்தது குறித்து தகவல் தெரியவந்ததும், சம்பந்தப்பட்ட ஆசிரியரை பள்ளியில் இருந்து பணி நீக்கம் செய்துவிட்டோம். வருங்காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார்.