சேலத்தில் ஏரியில் மீன் பிடிக்க சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சேலம் அழகாபுரம் அருகில் உள்ள ரெட்டியூர் ஏரியில் கடந்த சில நாள்களாக பெய்த மழையினால் தண்ணீர் குட்டை போல் தேங்கியுள்ளது. இந்த ஏரிக்கு சேலம் பெருமாள்மலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு பயிலும் சங்கீத், நகரமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவர் அன்புசெல்வம் மற்றும் மாணவர்கள் குழுவாகச் சென்றனர். இவர்கள் இருவரும் ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். பின்னர் நீச்சல் பழக முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது இருவரும் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனர். இதையடுத்து, காவலர்கள் விரைந்து சென்று பொது மக்கள் ஒத்துழைப்புடன் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சங்கீத், அன்பு செல்வம் ஆகியோரின் சடலங்களை மீட்டு உடற்கூராய்வு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அழகாபுரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.