சேலத்தில் உடல்நலம் பாதிப்பால் விரக்திஅடைந்த ஓய்வு பெற்ற ஆசிரியர், தனது மனைவியுடன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் அரிசிபாளையம் சவுண்டம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (80). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மனைவி பாக்யம் (74). இத்தம்பதிக்கு சரளா, சாந்தி, சித்ரா என மூன்று மகள்கள்
உள்ளனர்.
இவர்கள் மூவரும் திருமணமாகி குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் சம்பத் தனது ஓய்வூதியத்தில் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாக இருவருக்கும் அடிக்கடி உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. இதனால் அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தம்பதியினர் சனிக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செவ்வாய்ப்பேட்டை போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.