வாழப்பாடியில், சேலம்-சென்னை புறவழிச் சாலையில் அமைந்துள்ள வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நகரப் பேருந்து இயக்க வேண்டுமென, ஞாயிற்றுக்கிழமை தினமணியில் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து, நகரப் பேருந்து இயக்குவதற்கான வழித்தடத்தை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் 20 ஆண்டுகளாக தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்த வட்டாட்சியர் அலுவலகம், வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையம் கிராமத்தில், சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே புதிய கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. அப்பகுதியிலேயே வாழப்பாடி வட்ட துணை கருவூலமும் அமைந்துள்ளது.
அலுவலகப் பணியாளர்கள் மட்டுமின்றி, தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், மற்ற துறை சார்ந்த பணியாளர்களும் பல்வேறு பணிகளுக்காக வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் துணை கருவூலத்துக்கு வந்து செல்கின்றனர்.
இந்த இரு அலுவலகங்களும் போதிய போக்குவரத்து வசதியில்லாத புறநகர் பகுதியில் புறவழிச்சாலையில் அமைந்துள்ளதால், குறித்த நேரத்துக்குள் சென்று திரும்ப முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுமட்டுமின்றி, வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையம் கிராமத்துக்கும் இதுவரை அரசு நகரப் பேருந்து வசதியில்லாததால், ஒரு கி.மீ., தொலைவுக்கு மேல் நடந்து சென்று தம்மம்பட்டி சாலையில் காத்திருந்து பேருந்தில் பயணிக்க வேண்டிய நிலையுள்ளது.
எனவே, வாழப்பாடி பகுதி பொதுமக்களின் நலன் கருதி, வாழப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து தம்மம்பட்டி சாலை, புதுப்பாளையம் இணைப்புச் சாலை வழியாக, வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அமைந்துள்ள புதுப்பாளையம் கிராமத்துக்கு சேலம்-சென்னை புறவழிச் சாலையில் நகரப் பேருந்து இயக்க வேண்டுமென, ஞாயிற்றுக்கிழமை தினமணியில் செய்தி வெளியானது.
இதனைடுத்து, வாழப்பாடி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையின் கிளை மேலாளர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர், வாழப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து தம்மம்பட்டி சாலை வழியாக ரயில் நிலையம், நீதிமன்றம் மற்றும் புதுப்பாளையம் கிராமம் வழியாக புறவழிச் சாலையில் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு நகரப் பேருந்து இயக்குவது குறித்து திங்கள்கிழமை காலை வழித்தட ஆய்வு செய்தனர். இதனால், வாழப்பாடி புதுப்பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.