ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டாரத்தில் கால்நடைகளுக்கான வைக்கோல் போர் விற்பனை அதிகரித்துள்ளதால், அதன் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்தாண்டு ஓரளவுக்கு மழை பெய்ததால் நெல் நடவு செய்யப்பட்டு வருகிறது. ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் கிணற்று நீர்ப் பாசனம் உள்ள விவசாயிகள் நெல் நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த காலங்களில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் அறுவடை தற்போது நடைபெற்று வருகிறது. அறுவடைக்கு பிறகு கால்நடைகளுக்கு தீவனமாகக் கிடைக்கும் வைக்கோலை விற்று அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு அறுவடை இயந்திரத்துக்கு தேவையான வாடகையை விவசாயிகள் கொடுத்துவிடுவர். ஆனால், நடப்பாண்டில் வைக்கோல் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் போதுமான மழை பெய்து வருவதால், மேய்ச்சல் நிலங்களில் புற்கள் முளைத்துள்ளன. மேலும், பலரும் பசுந்தீவனம் தயார் செய்து கால்நடைகளுக்கு கொடுத்து வருகின்றனர். அதனால், வைக்கோல் விற்பனை முழுமையாகச் சரிந்து தேக்கமடைந்துள்ளது.
மேலும், அறுவடைக்கு பிறகு கிடைக்கும் வைக்கோல் கடந்த காலங்களில் உருளைக் கட்டு ஒன்றுக்கு ரூ.130 வரை விலை கிடைத்தது. ஒரு ஏக்கருக்கு 50 முதல் 70 கட்டு வரை வைக்கோல் போர் உருளைக் கட்டுகள் கிடைக்கும். இதன்மூலம் ஏக்கருக்கு ரூ.9 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். நடப்பாண்டில் கட்டு ஒன்று ரூ.30 முதல் ரூ.40 வரை மட்டுமே விலை போகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியது, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் வைக்கோலை
வாங்கி சேலம், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வந்தோம். நடப்பாண்டில் சேலம் மாவட்டம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் ஓரளவுக்கு மழை பெய்து வருகிறது. அதனால், கால்நடைகளுக்கு தேவையான தீவனங்களை பயிர் செய்து கொண்டனர். வைக்கோல் தேவை குறைந்ததால் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தனர்.