ஓமலூர் வட்டாரப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் பல்வகை பூக்களும் பயிரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பூக்கள் விவசாயத்தில் நல்ல மகசூலை பெறும் வகையில், தோட்டக்கலைத் துறை சார்பில் ஆலோசனைகளும் வழங்கபட்டு வருகின்றன. ஓமலூர் வட்டத்தில் விவசாயிகள் அதிகமாக சாமந்தி உள்ளிட்ட பூக்களை மட்டுமே பயிரிட்டு வருகின்றனர். ஓமலூர் வட்டார கிராமங்களில் தற்போது மழைபெய்து வருவதால், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளதால் விவசாயிகள் ஆர்வமுடன் பூக்களை நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் மஞ்சள், வெள்ளை, சிவப்பு, ரோஸ் போன்ற பல வண்ணங்களை கொண்ட சாமந்தி பூக்கள், குண்டு மல்லி, பட்ரோஸ், கோழிகொண்டை, மரிக்கொழுந்து, சம்மங்கி,துளசி, துலுக்க மல்லி போன்ற பல்வேறு வகை பூச்செடிகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
மேலும், நடவு செய்த பூச்செடிகளுக்கு விவசாயிகள் மருந்து அடித்தும், உரம், யூரியாக்கள் போன்றவற்றை வைத்தும் பராமரித்து வருகின்றனர். மேலும், பூக்கள் பூப்பதற்கு முன்னதாக அறுவடை செய்யும் வகையிலான ஊடு பயிர்களாக மிளகாய், சின்ன வெங்காயம், முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற பயிர்களையும் விதைத்திருந்தனர்.
தற்போது அந்த ஊடு பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளன. மேலும், ஆண்டு முழுவதும் தொடர்ந்து பூக்கள் அறுவடை செய்யும் வகையில், ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு மாத இடைவெளியிலும் பூக்கள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டார கிராமங்களில் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பில் பூக்கள் நடவு பணிகளும், நடவு செய்த பூச்செடிகளைப் பராமரிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சுமார் 500 ஏக்கரில் பல்வகை சாமந்தி பூக்களும், சம்மங்கி, குண்டுமல்லி, ரோஸ், மரிகொளுந்து, கோழிகொண்டை போன்ற பல்வகையிலான மலர்கள் சுமார் ஐநூறு ஏக்கர் பரப்பிலும் நடவு செய்யப்பட்டுள்ளன.
ஓமலூர், காடையாம்பட்டி விவசாயிகள் பூக்களை நடவு செய்து நல்ல மகசூலை பெறுவதற்கான அனைத்து ஆலோசனைகளையும் தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் வழங்கி வருகின்றனர். அவ்வப்போது வயல்களுக்குச் சென்று பூச்செடிகளை ஆய்வு செய்து தேவையான உதவிகளை விவசாயிகளுக்கு செய்து வருகின்றனர். இதனால், நிகழாண்டு போதுமான மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் உள்ளனர்.