மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 நாள்களுக்குப் பிறகு 110 அடிக்கு கீழே சரிந்தது. காவிரியின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக கடந்த ஜூலை 19ஆம் தேதி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 110 அடியாக உயர்ந்தது. அதன் பிறகு தொடர்ந்து 60 நாள்கள் 110 அடிக்கு குறையாமல் இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 109.73 அடியாக சரிந்தது. அணைக்கு நொடிக்கு 9,096 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 20,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தது. அணையின் நீர் இருப்பு 72.02 டி.எம்.சியாக இருந்தது.