ஓமலூர் அருகே இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு பேர் உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம், மேச்சேரி பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (45), திமுக மாவட்டப் பிரதிநிதியாக உள்ளார். இவரது மனைவி சிவகாமி, ஓமலூர் அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு12 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்நிலையில், சீனிவாசன் மேச்சேரியில் இருந்து சேலம் செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, ஓமலூர் அருகே பச்சனம்பட்டி என்ற இடத்தில் சாலையோரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்லிடப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாராம். அப்போது, மேட்டூரில் இருந்து சேலம் நோக்கி வேகமாக சென்ற கார் சீனிவாசன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சீனிவாசனுக்கு தலையில் பலத்த காயமேற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்தார்.
இதேபோல், ஓமலூர் அருகேயுள்ள கேட்டமேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் செல்வராஜ் (50). இவருக்கு பூங்கொடி என்ற மனைவி, ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், ஓமலூரில் இருந்து தீவட்டிப்பட்டிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்ற செல்வராஜ் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே செல்வராஜ் உயிரிழந்தார். தகவல் அறிந்த தீவட்டிப்பட்டி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டனர். இந்த இரண்டு விபத்துகள் குறித்தும் ஓமலூர் மற்றும் தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.