கொடுத்தப் பணத்தைத் திருப்பிக் கேட்டதில் தந்தை, மகனும் தாக்கப்பட்ட சம்பவத்தில் சங்ககிரி போலீஸார் 5 பேரைக் கைது செய்தனர்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை, பெரியார் நகர், பகுதியைச் சேர்ந்தவர் சித்தேஸ்வரன். இவரது மகன் தர்மேந்திரா. தந்தை, மகன் இருவரும் பித்தளை கழிவு மண் வாங்கி அதிலிருந்து பித்தளையை தனியாக பிரித்துக் கட்டியாக தயார் செய்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.
சங்ககிரி, கழுகுமேடு பகுதியைச் சேர்ந்த ராமு என்பவர் இத்தொழிலில் இடைத்தரகர். இதனால் ராமுவுக்கு சித்தேஸ்வரன் ரொக்கம் ரூ.16.49 லட்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட பிரச்னையில் பணத்தைத் தருமாறு சித்தேஸ்வரன் அவரது மகனும் ஞாயிற்றுக்கிழமை கேட்டனர்.அப்போது ஏற்பட்ட தகராறில் ராமும் அவரது நண்பர்களும் சேர்ந்து தந்தை, மகனைத் தாக்கி 3.5 பவுன் நகை, செல்லிடப்பேசியை பறித்து கொண்டார்களாம். இதில் அவர் அளித்த புகாரின் பேரில் சங்ககிரி போலீஸார் வழக்குப் பதிந்து கழுகுமேடு பகுதியைச் சேர்ந்த தேவா (21), தினேஷ் (29), சிவா (37) ராஜேஸ்குமார் (20), குமார் (23) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.