நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக 3-ஆவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், 4-ஆவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற துவக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட முதன்மை நீதிபதி மோகன்ராஜ் தலைமை வகித்துப் பேசியது:
நீதிமன்றங்களில் வழக்குகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். அப்படி தீர்வு காணும்பட்சத்தில் சட்டத்துக்குப் புறம்பான வழிகளை யாரும் தேடி செல்ல மாட்டார்கள்.
வழக்குகளைத் தாமதப்படுத்தாமல் நடத்தி முடிக்கும் போது குற்றங்களும் குறையும். தற்போது புதிதாக 3 ஆவது மற்றும் 4 ஆவது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தொடங்கப்பட்டதன் மூலம் வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக இருக்கும் என்றார். இதில் முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டோபர், தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் விஷ்வநாத், மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி சிவஞானம், மாவட்ட வழக்குரைஞர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி, செயலாளர் அய்யப்பமணி ஆகியோர் பங்கேற்றனர்.