சேலம் மாவட்ட மேற்கு எல்லைப் பகுதியான பூலாம்பட்டி பகுதியில் சாரிநடவு எனப்படும் நவீனமுறை நடவினை அப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், நாவிதன்குட்டை, பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கனமழை கொட்டியது.
சுமார் இரண்டு மணி நேரம் பெய்த இக் கனமழையால் அப்பகுதியில் உள்ள சீர் செய்யப்பட்ட வயல்வெளிகளில் மழைநீர் நிரம்பியது. இதை அடுத்து அப்பகுதி விவசாயிகள் சாரிநடவு எனப்படும் நவீன முறை நெல்நடவுப் பணியில் தீவிரம் காட்டிவருகின்றனர்.
பில்லுக்குறிச்சி பகுதி விவசாயி வேலப்பன் (55) இதுகுறித்துக்கூறியது:
கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து வரும் நான் அவ்வப்போது விவசாயத் துறையினர் பரிந்துரைக்கும் பல்வேறு விவசாய யுக்திகளை பின்பற்றி வருகிறேன். வேளாண்மைத்துறையினர் வழிகாட்டுதலின்படி சாரிநடவு எனப்படும் நவீன முறை நடவு செய்கிறேன். இதில் ஒரு குத்துக்கு ஒன்று அல்லது இரண்டு பயிர் என்ற எண்ணிக்கையில் சீரான இடைவெளியுடன் வரிசைகள் அமைத்து நெல் நடவு
செய்யப்படுகிறது.
இவ்வகை நடவு முறையில் நெற்பயிர் அதிக தூர் எடுத்து வளர்ந்து கூடுதலான மகசூழ் அளித்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இவ்வகை நடவுமூலம் வழக்கமான அளவினை விட கூடுதலான அளவில் வருவாய்க் கிடைப்பதாக அவர் கூறினார்.
இவ்வகை நடவு முறையில், பொன்னி ரக நெல்லினை இப்பகுதி விவசாயிகள் அதிகம் பயிர் செய்து வருகின்றனர்.