சேலம் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 89 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக வெள்ளிக்கிழமை இரவு 9 மணியிலிருந்து சுமார் ஒரு மணி நேரம் வரை மழை பெய்தது. சேலம் மாநகரப் பகுதியில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கிச்சிபாளையம், கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் என பல இடங்களில் மழை பெய்தது. இதனால் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. வெள்ளிக்கிழமை இரவில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் புறநகர் பகுதியில் ஆத்தூர், ஏற்காடு, எடப்பாடி, சங்ககிரி பகுதியிலும் மழை பெய்தது.
சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்: ஆத்தூர்25, சேலம்22, ஏற்காடு17, எடப்பாடி14, சங்ககிரி10 என மாவட்டத்தில் மொத்தம் 89 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
ஓமலூரில்...
ஓமலூர் வட்டாரப் பகுதியில் வீசிய சூறாவளி காற்றுக்கு பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி பகுதியில் கடுமையான வெயில் வாட்டி வந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மாலை நேரங்களில் கருமேகம் சூழ்ந்து வானம் காட்சியளித்தது. ஆனால், மழைக்கு முன் இரண்டு நாள்களாக சூறைக்காற்று பலமாக வீசி வருகிறது.
இதில், ஓமலூர் அருகேயுள்ள சக்கரசெட்டிப்பட்டி, காமலாபுரம், தும்பிபாடி உள்ளிட்ட கிராமங்களில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்து சேதமடைந்தன.
இதனால், பொதுமக்கள் வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து அவதிப்பட்டு வருகின்றனர்.