ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு சங்ககிரியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் சார்பில் சனிக்கிழமை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பல்வேறு அரசியில் கட்சிகள், பொதுநல அமைப்புகளின் சார்பில் சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியின் முடிவில் வீரர்கள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
இதில் பாஜக நிர்வாகி சஞ்சீவ்குமார், காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் சி.எஸ்.ஜெய்க்குமார், மதிமுக மேற்கு மாவட்டச் செயலர் (பொறுப்பு) என்.மகேந்திரவர்மன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சங்ககிரி வட்டக் கிளைச் செயலர் எஸ்.கே. சேகர், பாமக நிர்வாகி கருணாநிதி, மக்கள் மன்ற இணைச் செயலர் எஸ்டிஎஸ் கனகராஜ், யங் ஸ்டார் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.