தளவாய்ப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில் பறவைகள் கணக்கெடுப்பில் திங்கள்கிழமை மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்ட தளவாய்ப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர்.
மூன்றாம் ஆண்டாக அந்தக் கிராமத்தில் ஏரி, வயல்களில் கடந்த நான்கு நாள்களாக பறவைகளைக் கணக்கெடுத்து வலைதளங்களில் பதிவிடுகின்றனர். இதன் மூலம் நம் பகுதியில் காணப்படும் பறவை இனங்கள் உலகளவில் உள்ள பறவை ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர் பெ. ராஜாங்கம் கூறியதாவது:
கடந்த ஆண்டு நடைபெற்ற பறவைகளின் கணக்கெடுப்புப் புள்ளி விவரங்கள் நம் நாட்டின் நிலையை நன்கு விளக்குகிறது.
33 கோடி மக்கள்தொகை கொண்ட அமெரிக்காவில் 1,10,151 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளது. 120 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பில் 13,576 மட்டுமே.
மேலும் நம் நாட்டில் பறவைகள் கணக்கெடுப்பில் பங்கேற்றவர்கள் 1,552 பேர் மட்டுமே. பறவைகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளதே காரணம்.
சுற்றுச்சூழலை சரிசெய்யும் காரணிகளில் பறவைகளின் பங்கு அதிகம். ஆகவே, வரும் காலத்தில் மாணவ, மாணவிகளிடையே இச் செயல்பாட்டை ஊக்கப்படுத்தி எதிர்காலத்தில் நிறைய ஆர்வலர்களை உருவாக்குவோம் என்பதில் ஐயமில்லை என்றார் அவர்.