பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-இல் துவக்கம்: 40,000 பேர் எழுதுகின்றனர்

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத் தேர்வை 40,068 பேர் எழுதுகின்றனர் என ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் தெரிவித்தார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பொதுத் தேர்வுகள் மார்ச்-2019 நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பேசியது: அரசுத் தேர்வுத் துறையால் நிகழ் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி மார்ச் 19-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் மார்ச் 6-ஆம் தேதி தொடங்கி மார்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை அமைக்கப்பட்டுள்ள 120 தேர்வு மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன.
பிளஸ் 2 பொதுத் தேர்வை 18,734 ஆண்களும், 21,334 பெண்களுமாக மொத்தம் 40,068 தேர்வர்களும், பிளஸ் 1 பொதுத் தேர்வை 17,034 ஆண்களும், 20,323 பெண்களுமாக மொத்தம் 37,357 தேர்வர்களும் எழுத
உள்ளனர்.
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுவோர் 45 ஆயிரம் பேர்: 10-ஆம் வகுப்பு பொதுத்  தேர்வு மார்ச் 14-ஆம் தேதி முதல் மார்ச் 29-ஆம் தேதி முடிய உள்ள நாள்களில் சேலம் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 152 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. இத் தேர்வை 45,278 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்.
வினாத்தாள்களுக்குப் பாதுகாப்பு: சேலம் மாவட்டத்தில் மேல்நிலைப் பொது தேர்வுகளுக்காக 13 வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களும், 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்காக 14  வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களும் அமைக்கப்பட்டு, இரட்டைப் பூட்டு முறையில் இரு காப்பாளர்கள் வீதம் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். 
வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் வினாத்தாள் அடங்கிய மந்தண கட்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுத் தேர்வு மையங்களுக்கு வழங்கப்பட உள்ளது. 
இக் காப்பகங்கள் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பில் கண்காணிக்கப்படும். இத் தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வு மையங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அவ் விடங்களில் அந்நியர் யாரும் அத்துமீறி நுழையக் கூடாது. இவ் விதிகளை மீறுவோர் மீது, உரிய காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் எந்தவொரு தேர்வு மையமும் பிரச்னைக்குரிய மையமாக இல்லை. அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய கோரப்பட்டுள்ளது.
ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் தண்டனைப் பற்றிய சுவரொட்டி தேர்வு மையங்களில் ஒட்டப்படும் என அறிவுறுத்தப்படுகிறது.
தேர்வுகள் செம்மையாக நடைபெறுவதை உறுதிபடுத்துவதற்கும், தீவிரமாகக் கண்காணிக்கும் பொருட்டும் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. 
தேர்வுகளில் முறைகேடுகள் காப்பி அடித்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றைக் கண்காணிப்பதற்குக் கோட்டாட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்கக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பறக்கும் படை: முதுகலை ஆசிரியர்கள் நிலையில் உள்ள பணியாளர்கள் பறக்கும் படை உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டு  அனைத்துத் தேர்வு மையங்களை எந்த நேரத்திலும் திடீர் பார்வையிட்டு ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் நா.அருள்ஜோதி அரசன், முதன்மை கல்வி அலுவலர் து.கணேஷ்மூர்த்தி, உதவி ஆட்சியர் (பயிற்சி) வந்தனா கார்க் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com