மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயில் பெரியத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மேச்சேரி பத்ரகாளியம்மன் கோயிலின் மாசிமகத் தேர்த் திருவிழா கடந்த 13-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. செவ்வாய்க்கிழமை மாலை பெரியத் தேரை வடம் பிடித்து பக்தர்கள் இழுத்துச் சென்று சந்தைபேட்டை வழியாக கிராமச் சாவடியில் நிறுத்தினர்.
தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்த் திருவிழாவில் பங்கேற்றனர்.
முன்னதாக தேர்த் திருவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பாக பேச்சு நடத்த இரு தரப்பினரும் பத்ரகாளியம்மன் கோயிலின் உள்பகுதியில் கூடினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அங்கிருந்த போலீஸார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது. ஆலயத்தில் இருந்த பக்தர்கள் ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
திடீரென ஆலயத்தின் நடையும், பிரதான நுழைவுவாயிலும் மூடப்பட்டன. இதனால் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். பலர் திரும்பிச் சென்றனர். சிறிது நேரத்தில் இரு தரப்பினரையும் அழைத்து போலீஸாரும், இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகளும் பேச்சு நடத்தினர். இரு தரப்பினரும் சேர்ந்து பெரிய தேரோட்டத்தை நடத்த ஒப்புக் கொண்டதால் போலீஸார் ஆலய நுழைவு வாயிலை மீண்டும் திறந்தனர்.
அதைத் தொடர்ந்து பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர். தேரோட்ட நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலர் ராஜா, எழுத்தர் கலைவாணன், மேச்சேரி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர்கள் கே. கலையரசன், சந்திரசேகரன், ராஜா துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், மேச்சேரி பேரூராட்சி முன்னாள் தலைவர் குமார் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.