சேலத்தில், தினமணி நாளிதழ் மற்றும் ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து 5-ஆம் ஆண்டாக நடத்தும் ஆரோக்கியம் இலவச மருத்துவக் கண்காட்சி சனிக்கிழமை (பிப்.23) துவங்கியது.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே பொன்னுசாமி கவுண்டர் திருமண மண்டபத்தில் மருத்துவக் கண்காட்சியை மாநகர காவல் ஆணையர் கே. சங்கர், ரிப்பன் வெட்டி தொடக்கி வைத்தார். தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் முன்னிலை வகித்தார்.
சேலம் மாநகராட்சி ஆணையர் ரெ. சதீஷ், ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மேலாண் இயக்குநர் மருத்துவர் கே. அர்த்தநாரி, சரவணா மருத்துவமனை மேலாண் இயக்குநர் மருத்துவர் எஸ். அசோக் மற்றும் எஸ்.எஸ். மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குநர் மருத்துவர் சுமதி செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
கண்காட்சியில், இ.சி.ஜி. - எக்கோ பரிசோதனை, பல் பரிசோதனை, கண் பரிசோதனை, எலும்பு மூட்டு சிகிச்சை ஆலோசனைகள், ரத்த தான முகாம் போன்ற பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன.
நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று இலவச மருத்துவ பரிசோதனைகளை செய்து கொண்டனர். முன்னணி மருத்துவமனைகளின் அரங்குகள், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, மருத்துவ அரங்குகள், இயற்கை உணவு மற்றும் யோகா அரங்குகள், காப்பீட்டு நிறுவன அரங்குகள், ஸ்கேன் சென்டர் அரங்குகள், பிசியோதெரபி மற்றும் உடற்பயிற்சி உபகரண அரங்குகள், குடிநீர் சுத்திகரிப்பு அரங்குகள் என சுமார் 50 அரங்குகள் இடம் பெற்றுள்ளன.
கண்காட்சியில் தலைமை விளம்பரதாரராக ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், முதன்மை விளம்பரதாரராக கோபி மருத்துவமனையும்,
எஸ்.எஸ். மெடிக்கல் சென்டர் மற்றும் சரவணா மருத்துவமனை ஆகியவை துணை விளம்பரதாரர்களாகவும், எல்.ஐ.சி. ஆப் இந்தியா- சேலம் கோட்டம், தி நியூரோ மற்றும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, சுதா மருத்துவமனை, எஸ்.பி.எம்.எம். மருத்துவமனை ஆகியவை இணை விளம்பரதாரர்களாகவும் பங்கேற்றுள்ளன. ஆவின் மற்றும் ஸ்டெப் அப் ஆகியவையும் கண்காட்சியில் இணைந்துள்ளன.
ஞாயிற்றுக்கிழமை வரை இரண்டு நாள்கள் நடைபெறும் இக் கண்காட்சி காலை 10 மணிக்குத் தொடங்கி, இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.