திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மார்க்கண்டேயன் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி. ஆட்டோ ஓட்டுநரான இவர், கடந்த 3 ஆம் தேதி தனது ஆட்டோவை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக, வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, மதுரையில் திலகர் திடல் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்குரிய ஒரு ஆட்டோவை பிடித்து சோதனையிட்டனர். அதில், அந்த ஆட்டோ வத்தலகுண்டு பகுதியில் காணாமல்போனது தெரியவந்தது. அதையடுத்து, வத்தலகுண்டு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னர், மதுரை திருநகரைச் சேர்ந்த ஜெயசந்திரன் (32) மற்றும் அவரது உடன்பிறந்த சகோதரர் முத்துக்குமார் (24)ஆகிய இருவரையும், வத்தலகுண்டு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து வத்தலகுண்டு மற்றும் சிவகங்கை மாவட்டத்திலிருந்து திருடிய 2 ஆட்டோக்களை போலீஸார் கைப்பற்றினர். இவர்களது கூட்டாளியான மதுரை தத்தனேரியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.