பழனி மலைக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 17 ஆம் தேதி முதல் காப்புக் கட்டுதலுடன் தொடங்குகிறது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தீபக் கார்த்திகைத் திருவிழா. ஏழு நாள்கள் நடைபெறும் இவ்விழா வரும் 17ஆம் தேதி மலைக்கோயிலில் காப்புகட்டுதலுடன் தொடங்குகிறது. மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜைக்குப் பின் மூலவருக்கு காப்பு கட்டப்படும். அதைத்தொடர்ந்து சண்முகருக்கு காப்பு கட்டப்படும்.
தொடர்ந்து துவாரபாலகர்கள், நவவீரர்கள், மயில், கம்பம் ஆகியவற்றுக்கு காப்பு கட்டப்படும். பின்னர், மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனை, 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனை, இரவு 7 மணிக்கு தீபாராதனை மற்றும் தங்கரத புறப்பாடு நடைபெறும்.
தொடர்ந்து 6 நாள்களும் இப்பூஜை நடைபெறும். நவ. 22 ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றுதல் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையின்போது நடைபெறும். திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.
மாலை 5.15 மணிக்கு மேல் சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து யாகசாலை தீபாராதனையும், மலைக்கோயிலில் நான்கு திசைகளிலும் தீபம் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் திருக்கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும்.
தொடர்ந்து திருஆவினன்குடி கோயில் மற்றும் பெரியநாயகி அம்மன் கோயில்களிலும் கார்த்திகை தீபம் மற்றும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை பழனிக்கோயில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.