கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் அதிரடிப்படை மற்றும் போதை பொருள் தடுப்புப் படையினர் புதன்கிழமை 25 கி.மீ தூரம் நடந்தே சென்று ஆய்வு நடத்தினர்.
கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் டி.எஸ்.பி.ஆனந்த் தலைமையில், ஆய்வாளர் முருகன், அதிரடிப்படையினர் மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு ஆய்வாளர் நிஷா, வனவர் ஆனந்த் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் வனப் பகுதிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர்.
இதில், வனப் பகுதிகளில் சந்தேகத்துக்கிடமாக யாராவது தங்கியுள்ளனரா?, நக்ஸல்கள் ஊடுருவியுள்ளனரா?, கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டுள்ளனவா? என்பது குறித்து சுமார் 25 கி.மீ தூரம் நடந்தே சென்று ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து அதிரடிப்படை டி.எஸ்,.பி.ஆனந்த் கூறியதாவது:
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வழக்கமான பணிகளைத் தான் தற்போது மேற்கொண்டுள்ளோம். இருப்பினும் வனப் பகுதிகளில் நக்ஸல்கள் ஊடுருவியுள்ளனரா என்பது குறித்து மலைவாழ் மக்களிடம் கேட்டறிந்தோம். மேலும் கஞ்சா பயிரிடப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்தோம் என்றார்.