திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் தமுமுக கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
வத்தலகுண்டு காந்திநகர் பகுதியில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கொடிக்கம்பத்தை, மர்ம நபர்கள் சிலர் புதன்கிழமை இரவு அகற்றிச் சென்று விட்டனர். அதேபோல், புதுப்பட்டி சாலையிலுள்ள தமுமுக கொடிக்கம்பத்திலிருந்த கொடியையும் கிழித்து சேதப்படுத்தியிருந்தனர்.
இதனை அறிந்த தமுமுக வத்தலகுண்டு நகரத் தலைவர் இம்தியாஸ், செயலர் முகமது ரீஜால், மனித நேய மக்கள் கட்சி நகரத் தலைவர் அலாவுதீன் ஆகியோர் தலைமையில், வியாழக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது. வத்தலகுண்டு - பெரியகுளம் பிரதான சாலையில், பெரிய பள்ளிவாசல் முன்பு இரு சக்கர வாகனங்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர். கொடிக்கம்பத்தை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக் கோரி கோஷமிட்டனர்.
இதனை அடுத்து, வத்தலகுண்டு போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், அப் பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.