பாலின அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநங்கைகள் சார் -ஆட்சியரிடம் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
பழனி ராமநாத நகரில் வசித்து வரும் திருநங்கைகளில் பலர் காய்கறி, பழங்கள், பேன்சி பொருள்கள் விற்பனை செய்து வருகின்றனர். சிலர் சமையல் வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களில் சிலருக்கு மட்டுமே குடும்பஅட்டை, ஆதார் அட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதன்கிழமை 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பழனி சார் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து தங்கள் கோரிக்கை மனுவை சார்
ஆட்சியர் அருண்ராஜிடம் வழங்கினர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இங்குள்ள திருநங்கைகள் பலருக்கும் வாடகைக்கு கூட யாரும் வீடு தருவதில்லை. மேலும் நாங்கள் வெளியூருக்கு செல்லும் போது அடையாள அட்டை இல்லாததால் பல்வேறு சமூக பிரச்னைக்கு ஆளாகிறோம்.
எனவே சார் ஆட்சியர் மூலமாக எங்களுக்கு பாலின அடையாளத்துடன் கூடிய குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இலவச வீட்டுமனைப் பட்டா போன்றவை கிடைத்தால் சமூகத்தில் உரிய அந்தஸ்து கிடைக்கும் என்றனர். மனுவை பெற்றுக் கொண்ட சார் ஆட்சியர், விரைவில் ஆவன செய்வதாக உறுதியளித்தார்.