கொடைக்கானலில் கேரட் விளைச்சல் அதிகரித்து, விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மழை பெய்ததால் அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி,வில்பட்டி, கடல்கொடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கேரட் விளைச்சல் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது கேரட் எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கொடைக்கானலில் விளையக் கூடிய கேரட்டுகள் மதுரை,திண்டுக்கல், திருச்சி, தேனி போன்ற ஊர்களுக்கு மொத்தமாக அனுப்பப்படுகின்றன. தற்போது விளைச்சல் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ கேரட் ரூ. 15 முதல் 20 வரை மட்டுமே விலை போகிறது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இதுகுறித்து கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியது: கொடைக்கானலில் தற்போது கேரட் விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் விலை குறைந்து விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
மேலும் தோட்டக்கலைத்துறையின் மூலம் மானியமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய விவசாய இடு பொருட்களான உரம், பூச்சி மருந்துகள் பல மாதங்களாக வழங்கப்படவில்லை. இவற்றை வெளிமார்க்கெட்டில் அதிக விலை கொடுத்து வாங்கி வருகிறோம். விவசாய இடு பொருட்களை அரசு கொடுத்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்றனர்.