பழனி மலைக்கோயில் படிவழிப்பாதையில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் ஆக்ரமித்து கடைகள் வைத்துள்ளதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பழனி மலைக்கோயில் உச்சிக்கு செல்ல படிவழி மட்டுமன்றி வின்ச், ரோப்கார் இயக்கப்பட்டு வருகிறது. கூட்ட காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் படிவழிப் பாதையையே பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன் நீதிமன்ற உத்தரவின் பேரில் படி வழிப்பாதையில் உள்ள கடைகள் அகற்றப்பட்டன.
தற்போது மீண்டும் படிவழிப்பாதையில் ஏராளமானோர் கடைகள் வைத்துள்ளனர். இதனால் கூட்ட நேரங்களில் பக்தர்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
படி வழிப்பாதைகளை கண்காணிக்க தனியார் செக்யூரிட்டிகள் இருந்தாலும், கடைகள் அமைத்து தொடர்ந்து வியாபாரம் செய்கின்றனர்.
ஆகவே, படி வழிப்பாதைகளில் கண்காணிப்பு கேமராக்களை நிறுவி, ஆக்கிரமிப்பு கடைகளை கோயில் நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.