பழனியில் தெரு நாய்கள் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் வீதிகளில் நடந்து செல்ல அச்சமடைந்துள்ளனர்.
பழனியில் ஒவ்வொரு தெருவிலும் சுமார் பத்து நாய்கள் என நகர் முழுக்க ஐநூறுக்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித் திரிகின்றன.
குப்பைத்தொட்டிகளிலும், இறைச்சிக்கடைகளிலும் வீசப்படும் காலாவதியான உணவுகளை உண்பதால் நாய்கள் நோய் தொற்றுடன் உள்ளன. இதனால் பொதுமக்களுக்கு எளிதில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் தெருநாய்களில் பல வெறிபிடித்து சுற்றி வருவதால், வீதிகளில் செல்வோரை துரத்தி கடித்து வருகின்றன. பழனி அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 300-க்கும் மேற்பட்டோர் நாய்கடிக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் நோய் தொற்றுள்ள நாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.