தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணி வழங்கக் கோரியும், குடிநீர் வசதி ஏற்படுத்தக் கோரியும் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள இ.சித்தூர் ஊராட்சிக்குள்பட்ட கொடிக்காப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 30-க்கும் மேற்பட்டோர், வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கூறியது: சித்தூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களுக்கு பணி வழங்குவதில்லை. மேலும் எங்கள் பகுதியில் நீண்ட நாள்களாக குடிநீர் பிரச்னையும் உள்ளது. தகுதியான பயனாளிகளுக்கு 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க ஊராட்சி ஒன்றிய ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் குடிநீர் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் கோஷமிட்டனர்.