திண்டுக்கல் அருகே வியாழக்கிழமை மனைவியை வெட்டிக் கொன்ற அரசுப் பேருந்து ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அடுத்துள்ள கோட்டூர் ஆவரம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(40). அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சசிகலா(30). இவர்களுக்கு பூவிதா(14) என்ற மகள் உள்ளார். கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், வெளியே சென்றிருந்த சசிகலா, தனது மகளுடன் வியாழக்கிழமை வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த செல்வராஜ், ஆத்திரமடைந்து சசிகலா மற்றும் மகள் பூவிதாவை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த சசிகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து செல்வராஜ் தப்பித் தலைமறைவானார். இதில் காயமடைந்த சிறுமி பூவிதா ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.