திண்டுக்கல் பகுதியில் சமத்துவப் பொங்கல் விழா
திண்டுக்கல் பகுதியிலுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில், தமிழர் திருநாளை முன்னிட்டு சமத்துவப் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் இலக்கிய களம்: பிச்சாண்டி பில்டிங் பகுதியிலுள்ள இதன் அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், இலக்கிய களம் அமைப்பின் தலைவர் மு. குருவம்மாள், நிர்வாகிகள் க. மணிவண்ணன், மு. சரவணன், ஆர்.எஸ். மணி மற்றும் இலக்கிய கள உறுப்பினர்கள் குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
எஸ்எஸ்எம். பொறியியல் கல்லூரி: திண்டுக்கல் எஸ்எஸ்எம் பொறியியல் கல்லூரி சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவுக்கு, கல்லூரி முதல்வர் எம். சரவணன் தலைமை வகித்தார். வளாக இயக்குநர் எம். சந்திரன் முன்னிலை வகித்தார். பொங்கல் விழாவினை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு, எஸ்எஸ்எம் குழுமத்தின் செயலர் சி. கந்தசாமி பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
பொங்கல் விழாவினையொட்டி, மாணவர்களுக்கும், போராசிரியர்களுக்கும் உறியடித்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி உள்ளிட்ட விளையாட்டுகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, மனிதநேய மன்ற ஒருங்கிணைப்பாளர் ந. சம்பத்குமார் செய்திருந்தார்.
ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரி: திண்டுக்கல் ஏபிசி பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு, கல்லூரி முதல்வர் கே. மணிவண்ணன் தலைமை வகித்தார். நிர்வாகச் செயலர் திருப்பதி முன்னிலை வகித்தார். அலுவலக மேலாளர் வடிவேல்முருகன், சுப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
வரதராஜ் காம்ப்ளக்ஸ் ஸ்ரீவாசவி தங்க மாளிகை: தமிழர் திருநாளை முன்னிட்டு, ஸ்ரீ வாசவி தங்க மாளிகை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் மீனாட்சி ராமகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். ஸ்ரீவாசவி நிர்வாக இயக்குநர்கள் மேடா நித்தியானந்தம், மேடா என். ரவி, ஸ்ரீசரண், என். ஸ்ரீநிதி ஆகியோர், பொங்கல் விழாவில் கலந்துகொண்ட வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.