திண்டுக்கல் அருகே நடிகர் ரஜினிகாந்த் குறித்து முகநூலில் விமர்சனம் செய்தவரை தட்டிக் கேட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி உள்பட 9 பேர் மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியைச் சேர்ந்தவர் பி. கண்ணன்(40). ரஜினி மக்கள் மன்றத்தின் ஒன்றியச் செயலராக இருந்து வருகிறார். நடிகர் ரஜினிகாந்தின் திரைப்பட வசனம் குறித்து, தனது முகநூல் அஞ்சலில் கண்ணன் பதிவு செய்திருந்தாராம்.
அதே பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் (24) என்பவர், அந்த பதிவை விமர்சித்தும், எதிரான சில கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜயராகவன் உள்பட 10 பேர், கண்ணன், அவரது மனைவி வேணி, உறவினர்கள் 7 பேர் என மொத்தம் 9 பேரை புதன்கிழமை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த கண்ணன் உள்ளிட்ட 9 பேரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் கண்ணன் அளித்தப் புகாரின்பேரில், விஜயராகவன் உள்ளிட்ட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.