திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னனுமதி பெறாமலும், அரசிதழ் அறிவிக்கை பெறாமலும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, கிடா முட்டு, சேவல் சண்டை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டத்தில் 2019ஆம் ஆண்டு ஜனவரி 15 முதல் மே 31 வரை ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசின் முறையான அனுமதியும், அரசிதழ் அறிவிக்கை பெறாமலும் தடையை மீறி திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஒரு சிலர் முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
அனுமதியின்றி ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், மஞ்சுவிரட்டு, கிடாமுட்டு, சேவல் சண்டை நடத்துவோர் மீது காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.